உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம்-பௌத்த உச்சி மாநாடு இன்று 27 ஆம் திகதி கம்போடியாவில் உள்ள சோகா புனோம் பென் ஹோட்டலில் ஆரம்பமாகியது.
உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை சார்பாக அமரபுர நிக்காயவின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய மாதம்பகம அஸ்ஸஜி திஸ்ஸ மகாநாயக்க தேரர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அவர்கள் மற்றும் துணைச் செயலாளர் தாசிம் மௌலவி உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், கம்போடியா மக்கள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்ட, இன மற்றும் மத நல்லிணக்கத்தைக் கொண்டுள்ளனர் என்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் பல நாடுகள், உலக அமைப்புகளின் தலைவர்கள் கம்போடியாவை மிகவும் மதித்து பாராட்டியுள்ளனர் என்றும் 5% இஸ்லாம்% 93% பௌத்தம் மற்றும் 2% பிற மதங்களுக்கு இடையில் இன மற்றும் மத நல்லிணக்கத்தைக் கொண்ட ஒரு நாட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக கம்போடியா விளங்குகிறது என்றும் கூறினார்.
இஸ்லாத்தின் சூழலில் அதன் உலகளாவிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக உலக முஸ்லிம் லீக்கிற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன் ‘இது நமது தேசத்திற்கு ஒரு முக்கியமான நிகழ்வு’ என்றும் கம்போடியாவின் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களின் இணக்கமான சகவாழ்வை எடுத்துக்காட்டினார்.
மேலும் இஸ்லாம் மற்றும் பௌத்தம்’ என்ற கருப்பொருள், மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் அமைதியை வளர்ப்பதில் கம்போடியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும் மோதல் வரலாற்றிலிருந்து முழுமையான அமைதிக்கும், முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதக் குழுக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்கும் நாடாகவும் மாறிய கம்போடியா உலகிற்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் உலக லீக்கால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரலாற்று நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வாகும். கம்போடியா இராச்சியத்தில் இதுபோன்ற ஒரு முக்கியமான மதங்களுக்கு இடையேயான உரையாடல் முதன்முறையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.