இஸ்ரேலும் ஹமாஸும் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாக மத்தியஸ்த நாடுகளில் ஒன்றான எகிப்து அறிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் சனிக்கிழமை காலாவதியாகிறது. இஸ்ரேல், ஹமாஸ், கத்தார் மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக கெய்ரோவில் உள்ளனர்.
ஆனால் போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டத்திற்காக எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் அறிவிக்கப்படவில்லை.
இஸ்ரேலின் பேச்சுவார்த்தை குழு கெய்ரோவிலிருந்து திரும்பியதுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு குழுவை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஹமாஸ் மற்றும் பலஸ்தீன பிரிவுகள் இஸ்ரேலைத் தாக்கப் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஒப்படைக்க வேண்டும் என்று எகிப்து விரும்புவதாகவும், பலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை அவை எகிப்திய மற்றும் ஐரோப்பிய மேற்பார்வையின் கீழ் கிடங்குகளில் சேமிக்கப்படும் என்றும் எகிப்திய அதிகாரிகள் மற்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யா, எகிப்திய உளவுத்துறைத் தலைவருடனான இந்த சந்திப்பின் போது இந்த திட்டத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் கைதிகள் விடுதலை இறுதி நாள் நிறைவடைந்தது.
இந்த சூழ்நிலையில், இஸ்ரேல் மீண்டும் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கும் என்ற கவலை உள்ளது.உதவிகள் தடையின்றி செல்வதை இஸ்ரேல் தடுப்பதால் காசா மக்கள் துன்பப்படுகிறார்கள்.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு, அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைய இஸ்ரேலியப் படைகள் அதிகரித்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தை சரியான நேரத்தில் செயல்படுத்த இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஹமாஸ் அழைப்பு விடுத்தது.
இதற்கிடையில், மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டை இராணுவம் தீ வைத்து எரித்தது.
வெள்ளிக்கிழமை மேற்குக் கரையில் ஒரு பெண் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தொடர்ந்து 39வது நாளாக தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நோக்கமாகக் கொண்டது.
இதில் காசாவில் உயிருடன் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் திருப்பி அனுப்புவது மற்றும் அனைத்து இஸ்ரேலிய படைகளையும் காசாவில் இருந்து திரும்பப் பெற்று நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது ஆகியவையும் இந்த பேச்சுவார்த்தையில் அடங்கும்
மீதமுள்ள இறந்த பணயக்கைதிகளை திரும்பப் பெறுவது தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்படும்.
காசாவில் இன்னும் 59 இஸ்ரேலிய பணயக் கைதிகள் இருப்பதாகவும் அவர்களில் 24 பேர் உயிருடன் இருக்கலாம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.