சுவிஸ் நாட்டின் (House of religion ) சர்வமத இல்லத்தின் பிரதிநிதிகளான திரு. பீட்டர் மற்றும் திருமதி. ஏஞ்சலா ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை (28.02.2025) புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினரை புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அண்மையில் காலம் சென்ற புத்தளம் சர்வமத அமைப்பின் இணைத் தலைவரும் உலமா சபையின் மாவட்டத் தலைவருமான அஷ்ஷேய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களும் புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்கள் சிலரும் சில வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் நாட்டிலுள்ள சர்வமத இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டதன் விளைவாகவே இந்த இரு சர்வமத பிரதிநிதிகளும் இலங்கைக்கு வருகை தந்து, புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பைச் சார்ந்த தலைவர்களை சந்திக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இச் சந்திப்பில் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர்களான புத்தியாகம ரததன தேரர், சுந்தரராம குருக்கள், அருட்தந்தை கெனடி, அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் உட்பட இன்னும் பல மதத்தலைவர்களும் அமைப்பின் முக்கியமான உறுப்பினர்களும் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம் மின்ஹாஜ் அவர்களும் இன்னும் பலரும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சர்வமத அமைப்பானது, கடந்த காலங்களில் எவ்வாறு சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பது சம்பந்தமான ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
அதேபோன்று சுவிஸ் நாட்டில் (House of Religion) சர்வமத இல்லம் எத்தகைய சமய நல்லிணக்கப் பணிகளை முன்னெடுக்கின்றது என்பது பற்றியும் கலந்து கொண்ட பீட்டர் மற்றும் அஞ்சலோ ஆகிய இரு பிரதிநிதிகளும் அங்கிருந்தவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.
இச்சந்திப்பில் சுவிஸ் நாட்டிலும் இலங்கையிலும் இனங்களுக்கிடையலான நல்லுறவை ஏற்படுத்துவது சம்பந்தமான நல்ல அனுபவங்களை இரு சாராரும் மனம் திறந்து கலந்துரையாடியதோடு தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.
விசேடமாக இலங்கையில் குறிப்பாக புத்தளத்தில் காணப்படுகின்ற சுமுகமான, இணக்கப்பாடான சூழல், சுவிஸ் நாட்டவர்களை கவர்ந்திருந்ததையும் இக்கலந்துரையாடலின் போது தெரிந்து கொள்ளக்கூடிதாக இருந்தது.
இச்சந்திப்பிற்கான ஏற்பாட்டினை காசிமிய்யா அரபுக் கல்லூரியும் அதன் முகாமைத்துவ சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.