“காசாவானது பலஸ்தீன அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும். அதில் ஹமாஸ் பங்கு கொள்ளக் கூடாது. இஸ்ரேலை அச்சுறுத்தவும் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று கெய்ரோவில் எகிப்திய ஜனாதிபதி ஸீஸி உடனான ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், எகிப்திற்குச் சென்றுள்ளார்.
இவ்விஜயத்தின் போது காசாவில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவது தொடர்பாக எகிப்தின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது,மார்ச் மாத நடுப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பின்னர், அந்தப் பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் பொதுமக்களுக்கு பாரிய பின்னடைவு என்று மக்ரோன் சுட்டிக்காட்டினார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் எந்த தாமதமும் இல்லாமல், ஆக்கபூர்வமான முறையில் மீண்டும் தொடங்கப்பட வேண்டும், மேலும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான எகிப்தின் அயராத முயற்சிகளை நான் வரவேற்கிறேன் என்று கூறினார்.
ஜனவரி 19 அன்று நடைமுறைக்கு வந்த இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையிலான முந்தைய போர் நிறுத்தத்தின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்களாக எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தாருடன் சேர்ந்து இருந்தன.