பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பாப்பரசர் தனது 88 வயதில் நேற்று திங்கட்கிழமை (21) காலமானார்.
“பக்கவாதம், கோமா மற்றும் மீளமுடியாத இருதய சுற்றோட்ட செயலிழப்பு” ஆகியவற்றின் காரணமாக மரணித்துள்ளதாக வத்திக்கான் சுகாதார பணிப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவு உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களுக்குச் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையில் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து போப்பாக தேர்வான முதல் தலைவர் என்ற சாதனையைப் படைத்தவர் போப் பிரான்சிஸ். இந்த ஆண்டு இரட்டை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அதில் இருந்து மீண்டபோதும் உடல்நிலை முழுமையாகச் சீராகவில்லை.
இருந்தாலும் வீல் சேரில் இருந்தபடி ஞாயிற்றுக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் மக்களைச் சந்தித்திருந்தார். அவர் உடல்நிலை சீராகி வருவதாக மக்கள் கருதிய நிலையில், எதிர்பாராத விதமாகக் காலமானார்.