சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானுடனான சந்திப்பின் பின் நாடு திரும்பிய வேகத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று (23) இக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாற்றம் இன்றியும் கைவிடும் வரை இது தொடரும்.
“பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. ஏற்கெனவே பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் தற்போது இருக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக 48 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே1 ம் தேதிக்கு முன்னதாக திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் விரும்பத்தகாதவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு, ராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசக அதிகாரிகள் மீள அழைப்பு. இந்த ஆலோசகர்களுக்கான பணியிடங்களும் ரத்து.
வரும் மே 1 ஆம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆக குறைக்கப்படும்.