இந்தியப் பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 2023 செப்டம்பரில் நடந்த ‘ஜி20’ மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்திருந்த நிலையில் சவூதிக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி இன்று (22) சவூதி அரேபியா புறப்பட்டுச் சென்றுள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி,சவூதி செல்வது முதல் முறை.
சமூக – கலாசாரம் மற்றும் வர்த்தகத்தில் நீண்ட கால நட்பு நாடுகளான இந்தியாவும் சவூதி அரேபியாவும் அரசியல், வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது குறைந்தது ஆறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தங்கள் விண்வெளி ஆய்வு, எரிசக்தி, சுகாதாரம் அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் உள்ளடங்கும்.
பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் ஊடகப் பதிவில் ‘சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு தரையிறங்கினேன். இந்த பயணம் இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும்.
இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.