-எம்.ஐ. ஸாஹிர்
ரமழான் வந்தால் ரமழானை ஞாபகமூட்டுகின்றோம். ஹஜ் வந்தால் ஹஜ்ஜை ஞாபகமூட்டுகிறோம், மார்க்கம் பற்றிய விடயங்களை அவ்வப்போது ஞாபகமூட்டுகின்றோம்..
இஸ்லாம் சமயலறை முதல் ஆட்சிபீடம் வரை வழிகாட்டியுள்ளதென பெருமை பேசுகின்றோம்.
ஆனால் அரசியல் என வரும் போது மௌனமாக இருந்துவிடுகின்றோம்.
குறிப்பாக தேர்தல் காலங்களில் வழிகாட்டல்களை வழங்குவதில் பின்னிற்கின்றோம்..
அறிக்கை வழிகாட்டல்கள் மாத்திரம் தீர்வுகளைத் தராது..
ஏன் இந்த நிலை…?
அரசியல் பற்றிய புரிதல்தான் போதாமையென்றால் அரசியல் அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும், அறிவை வளர்ப்பது இபாதத் என்பதை நன்கறிவோம்.
அரசியல் சாக்கடை என்றால் அதனை தூய்மைப்படுத்துவது யார் கடமை…?
தேர்தல் வன்முறைகளைக் கொண்டதென வழிகாட்டிகள் ஒதுங்கிக் கொண்டால் யார்தான் அங்கிருந்து வழிகாட்டுவது…?
வழிகாட்ட வேண்டிய நேரத்தில், இடத்தில் வழிகாட்டல்களை வழங்காமல் வெறும் உபதேசங்களைச் செய்வதானது இருட்டில் பொருளைத் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடுவதற்கு சமனாகும்..
சண்டியணுக்கு வழிகாட்டாமல் சாமானியனுக்கு மாத்திரம் உபதேசம் செய்து Comfort Zone குள் இருந்துவிடப் போகின்றோமா..?
தேர்தல் மேடைகள் ரஸுலுல்லாஹ்வின் மீது ஸலவாத்து சொல்லி ஆரம்பிக்கப்பட்டு பிர்அவ்னின் கொடூரங்களை நினைவூட்டுவதாக முடிகின்றன.. அதனை ரசிக்கும் கலாசாரம் சர்வசாதாரணமாகிவிட்டது.
பேச்சுக்களும் எழுத்துக்களும் அடுத்தவர் மானத்தை எரிக்கின்றன, இந்நேரத்தில் அமல்களின் சிறப்புக்களை பேசுவதல்ல நல்லமல். இத்தீமைகளை துடைத்தெறிய முயற்சிப்பதே நல்லமல். இருதய நோயாளிக்குரிய சிகிச்சையை செய்யாமல் வேறு சிகிச்சை செய்வதை புத்திசாலித்தனம் என சொல்வதில்லையே!
தேசிய ரீதியாக. மாவட்ட ரீதியாக. ஊர் மட்டமென வேலைத்திட்டமொன்றை வகுத்து செயற்படுவது பொறுப்புதாரிகளின் கடமையாகும்.
தேசிய மட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை அழைத்து வழிகாட்டுங்கள்.
மாவட்ட மட்டத்திலும் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை அழைத்து வழிகாட்டுங்கள், நாடு முழுவதும் ஒரே தினத்தில் தேர்தல் விழிப்புணர்வு குத்பாவை திட்டமிட்டு நிகழ்த்துங்கள்..
ஒருவர் பேய்க்கு வாக்களித்தாலும் அது அவரது உரிமை, அதனை யாரும் குற்றப்படுத்த முடியாதென்ற செய்தியை அழுத்திச் சொல்லுங்கள்…
வன்முறை உரையாடலை மௌனத்தால் கூட ஆதரிக்கும் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் புறக்கணிக்கச் சொல்லுங்கள். நீதியை சொல்வதில் விட்டுக் கொடுக்காமல் இருங்கள். அழுத்தக் குழுவாக செயற்படுங்கள். இலங்கைச் சூழலில் உங்களின் பலத்தை அறிந்து செயற்படுங்கள்.
மக்கள் தெளிவு பெறுவார்கள். உலமாக்கள் மற்றும் இயக்கங்களின் கண்ணியமும் அதிகரிக்கும். நாம் முயற்சிக்காமல் அரசியலில் பண்பாடுகளை மக்களிடையே கொண்டு வர முடியாது.
அனர்த்தமொன்று நிகழுகின்ற போது ஒன்றுபடும் நாம் தேர்தல் காலங்களிலும் ஒன்று கூடி வழிகாட்டல்களை நடைமுறை ரீதியாக வழங்குவது எம்மனைவரதும் மீது கட்டாயக் கடமையாகும்.
இஸ்லாத்தின் எதிரிகள் எமக்கெதிராக AI தொழில்நுட்பத்துடன் திட்டமிட நாமோ இன்னும் ஒன்றுகூடவே சிந்திக்கின்றோம். ஒருங்கிணைந்து செயற்பட எம்மைத் தடுப்பது எது..? கலந்துரையாடுவோம்.