வெசாக் மற்றும் பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்கள் (உணவு தானம்) தொடர்பில் சுகாதார வழிமுறைகளுடனான பொதுவான அறிவுறுத்தல்களின் தொகுப்பை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ளது.
தன்சல் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பாரம்பரியமாகும். தன்சல்கள் குறிப்பாக வெசாக், பொசன் மற்றும் பிற மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் போது வழங்கப்படுவது வழக்கமாகும்.
இந்த நாட்களில், அனைத்து மக்களுக்கும் இலவசமாக உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்காக பலர் தன்சல் வழங்கும் நிலையங்களை நிர்மாணித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக சேவை பரவலாகப் பாராட்டப்பட்டாலும், இது பொது சுகாதார சவால்களுக்கும் வழிவகுக்கும் என்பதையும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, முக்கியமாக முறையற்ற உணவு தயாரிப்பு முறைகள், முறையற்ற சேமிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் இல்லாமல் உணவு தயாரிப்பதன் ஊடாக நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவது தொடர்பிலும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
