இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று ஹெர்ஸ்லியா பகுதியில் உள்ள மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருகிறது.
அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.
இந்த தாக்குதல்களினால் இரு தரப்பிலும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஈரான் தரப்பில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் தொடங்கியிருப்பதாகவும், இது இதற்கு முந்தைய தாக்குதல்களைக் காட்டிலும் மிகவும் வலுவான தாக்குதலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் மத்திய கடற்கரைப் பகுதிகள் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளிலும் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர்மட்ட ராணுவத் தளபதியுமான அலி ஷட்மானியை கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “துல்லியமான உளவுத் தகவல் அடிப்படையில் தெஹ்ரானின் மையத்தில் உள்ள ஒரு கட்டளை மையத்தை இஸ்ரேல் தாக்கியது.
அதில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும் ஈரானின் உயர்மட்ட தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷட்மானி கொல்லப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இப்போதைக்கு மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்த பதற்றத்தை உலக நாடுகள் உற்றுக் கவனித்தே வருகின்றன.