காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மார்ச் 22 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் ஹனீபா பத்ருன்னிஸா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்ததை வைத்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரத்தை வைத்தும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ருஸ்தியின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக 200,000 ரூபா செலுத்துமாறும் ஆணைக்குழு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இப்பரிந்துரைகளை ஜூலை 15 க்கு முன் நடைமுறைப்படுத்துமாறும் அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.