அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா நகரங்களில் புதன்கிழமை பகல் 12.37 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலாஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் தீவுக்கு 87 கி.மீ. தொலைவில் மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிதளவிலான பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
அதிகபட்சமாக 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் பற்றிய தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு வெளியிடவில்லை.
சுனாமி எச்சரிக்கை அலாஸ்காவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா பெனின்சுலா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சாண்ட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது.
இரண்டு மணிநேர கண்காணிப்புக்கு பிறகு சுனாமி எச்சரிக்கையை தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் திரும்பப்பெற்றது.
இருப்பினும், அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.