தமிழுக்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய சேவை இன்று கடல் கடந்து உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளதை, மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உலகின் மிகச் சிறந்த மற்றும் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில், இந்திய ஆய்வியல் துறையின் கீழ் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை நிறுவப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு இருக்கை ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, மலேசிய இஸ்லாமிய அறவாரியம் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
சாகித்திய அகடமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளமை, தமிழருக்கே ஒரு பெருமையாகும்.
“தமிழனின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கிய கவிக்கோ அப்துல் ரஹ்மான், தமிழ் இலக்கியத்தின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளார்.
படைப்புக்கும் படைப்பாளிக்கும் மரணம் இல்லை என்பதற்கான உன்னத சான்று இன்றைய நிகழ்வே. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை,” என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, தமிழ் மொழிக்கும், இலக்கிய வரலாற்றுக்கும் புதிய அடையாளம் சேர்த்துள்ளதோடு, கவிக்கோவின் சேவையை உலகிற்கு உணர்த்திய முக்கிய கட்டமாகவும் அமைகிறது.