PTA சட்டத்தின் கீழ் 8 மாதங்களாக தடுப்பிலிருக்கும் இளைஞர்: சமூக நீதிக் கட்சி அரசாங்கத்திடம் முக்கியக் கோரிக்கைகள் முன்வைப்பு!

Date:

பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) சட்டத்தின் கீழ் 8 மாதங்களாக தடுப்பிலிருக்கும் இளைஞரின் விடுதலைக்கு சமூக நீதிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மாவனல்லை, 20 வயதான ஸுஹைல் என்பவர், கடந்த வருடம் (2023) ஒக்டோபர் 23ஆம் திகதி தெஹிவளை Chabad House அருகே சோதனை செய்யப்பட்டபோது தேசிய அடையாள அட்டை இல்லாத படியினால், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதே நாளில், “வாக்குமூலம் ஒன்றை பெற்று விடுவிக்கிறோம்” என்று கூறி, தெஹிவளை காவல்துறையினர் ஸுஹைலை மீண்டும் கைது செய்ததாக சமூக நீதிக் கட்சி தெரிவித்துள்ளது.

இதன் பின்னர், தெஹிவளை காவல்துறையினர், “மாவனல்லையில் கைது செய்யப்பட்ட விவரம் மறைக்கப்பட்டு, மீண்டும் Chabad House அருகே கைதுசெய்யப்பட்டார்” எனும் போலியான B அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததாகவும், இதன் அடிப்படையில் ஸுஹைல் கடந்த 8 மாதங்களாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) பிரகாரம், தடுப்புக் காவல் உத்தரவு இல்லாமல் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 14 நாட்களுக்கு ஒருமுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவேண்டும். ஆனால், நீதிவானுக்கு அவரை விடுவிக்கும் அதிகாரம் இல்லாத நிலையில், சட்டமா அதிபரிடமிருந்து (Attorney General) சட்ட ஆலோசனை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் சூழ்நிலையில் ஸுஹைல் தொடர்ந்து சிறையில் வைக்கப்படுகிறார்.

சிறைப்படுத்தப்பட்டுள்ள ஸுஹைலின் விடுதலைக்காக மூத்த சட்டத்தரணிகள் குழு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனை ஆதரிக்கும் வகையில் சமூக நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

  1. சட்டமா அதிபர் திணைக்களம், இந்த வழக்கை நியாயமாக விசாரித்து, ஸுஹைலை விடுவிக்க தேவையான ஆலோசனையை கல்கிஸை நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும்.
  2. தடுப்புக் காவல் உத்தரவு இல்லாமல் PTA இன் அடிப்படையில் சிறையில் வாடும் மற்ற அபாய நிலையில் உள்ளவர்கள் பற்றிய முழுமையான பட்டியலை அரசு உடனடியாக வெளியிட்டு, அவர்களுக்கும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
  3. இந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்காமல் காலதாமதப்படுத்தும் அரசாங்கமே, இந்த சட்டத்தின் காரணமாக அப்பாவி மக்கள் சிறைக்குள்ளாகும் நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

“நீங்கள் 2/3 பெரும்பான்மையை கொண்டிருந்தும் PTA சட்டத்தை நீக்க தவறியதால் இன்றும் அப்பாவிகள் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள்” என சமூக நீதிக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இவ்வாறு, ஸுஹைலின் விடுதலையை வலியுறுத்தியும், PTA சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் சமூக நீதிக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...