காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு (07) கூடிய போது, காசா நகரத்தின் முழு இராணுவக் கட்டுப்பாட்டையும் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை நெதன்யாகு விளக்கியதாகவும் அதன் அடிப்படையில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமெரிக்காவின் Axios டிஜிட்டல் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
காசா பகுதியின் வடக்கே அமைந்துள்ள காசா நகரத்தைத் தவிர, காசா பகுதியின் சுமார் 75% பகுதியை இஸ்ரேல் ஏற்கனவே கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் விளைவாக, அதன் பல எல்லைகளை அவர்கள் மூடி வைத்துள்ளனர்.
அதற்கமைய, காசா பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதன் இரண்டு மில்லியன் மக்கள்தொகையில் பெரும்பாலோர் தஞ்சம் புகுந்துள்ள அழிவுக்குட்படாத பகுதிகளில் தரைவழி நடவடிக்கைகளை இஸ்ரேல் ஆரம்பிக்க வேண்டும்.
இஸ்ரேலின் இந்த முடிவு காரணமாக ஹமாஸ் அமைப்பினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இஸ்ரேலியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் திட்டம் ‘பேரழிவு விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையும் , கடுமையாக எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர், முஹன்னத் ஹடி (Muhannad Hadi) கருத்துத் தெரிவிக்கையில் ” காசா நகரில் ஏற்கனவே உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கடுமையாக தட்டுப்பாடு நிலையில் உள்ளன.
இதற்கிடையில் இத்தகைய பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.