இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது.
ராஜித சேனாரத்ன வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைகளை சட்டவிரோதமாக கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் 262 லட்சம் ரூபா இழப்பை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு ஆணைக்குழுவினால் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தரவில்லை.