நபி முஹம்மத் அவர்கள் மனித நேயம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள்: ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள விசேட செய்தி

Date:

அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள விசேட செய்தி

உலகளாவிய முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் பெருமானார் நபி முஹம்மத் அவர்கள் மனித சமூகத்துக்கு ஒரு விடிவாக சத்திய மார்க்கத்தையும், சமூக விடுதலையையும், சுய மரியாதையையும், அமைதியையும், சுபீட்சத்தையும் சுமந்தவர்களாக இப்பூமியில் வந்துதித்தார்கள்.

அதனால் தான் அல்லாஹு தஆலா நபி  அவர்களை பற்றி அல்-குர்ஆனிலே குறிப்பிடும் போது “உலக மக்களுக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை.” என சிறப்பித்துக் கூறுகிறான். (சூரா அல்-அன்பியா : 107)

மேற்படி அல்-குர்ஆனின் கூற்றுப் படி, அகிலத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபிகள் பெருமானார்   அவர்கள் ரபீஉல் அவ்வல் மாத்தித்திலே தான் பிறந்தார்கள் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

உண்மையில் ‘ரபீஉன்’ என்றால் வசந்தம் என்று பொருளாகும். வசந்த காலத்தில் தான் தாவரங்கள் பூத்துக் குலுங்கி பூமிக்கு பசுமையையும், செழிப்பையும், அழகையும், ரம்மியத்தையும் ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்த எமது உயிரிலும் மேலான நபி முஹம்மத்   அவர்கள் மனித சமூகத்துக்கு சத்திய மார்க்கத்தையும், இறையருளையும், சர்வதேசத் தூதையும் சுமந்து வந்தார்கள்.

அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு அனுப்பட்ட அத்தனை நபிமார்களும் ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு ஆகிய விடயங்களைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். இறுதி இறைத்தூதரான நபிகளார்  அவர்களும் அதே பணியினை மேற்கொள்வதற்காகத் தான் அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்.

இதனை பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்.” (சூரா அல்-ஜுமுஆ : 02)

“(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். (சூரா அல்-பகரா : 119)

அந்தவகையில் நபி ﷺ அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் பல சிறப்பம்சங்களைப் பெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீலாதுந் நபி தினம் எனப்படும் நபிகளார் ﷺ அவர்களது பிறந்த தினமானது உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய உன்னதமான ஒரு நிகழ்வுக்குரிய தினமாகும்.

அன்னார் மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள். அனைவருடனும் பாகுபாடின்றி, அன்பாகவும் பண்பாகவும் பழகினார்கள். மனித நேயம், சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்காக அன்னார் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். எப்போதும் எல்லா நிலைமைகளிலும் நீதமாக நடந்துகொண்டதோடு ஏழை எளியோரை, அநாதைகளை அரவணைத்து வாழ்ந்தார்கள். பல்லின சமூகங்களையும் உள்ளடக்கிய ‘மதீனா சாசனம்’ எனும் நீதமான யாப்பை அறிமுகம் செய்தார்கள். ஆன்மிகம், லௌகீகம் ஆகிய இரண்டிலும் ஒருசேர மகத்தான வெற்றியைப் பெற்றார்கள். எனவேதான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதராக அண்ணல் நபி   அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

நபி ﷺ அவர்கள் மூலம் அல்லாஹ் நபித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான். மறுமை வரைக்கும் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டும் பொறுப்பை அன்னாரிடம் ஒப்படைத்தான். எனவே எம் பெருமானார்   அவர்கள் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஏக வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். அம்மாமனிதரின் முழு வாழ்வுமே மனித குலத்திற்கான அழகிய முன்மாதிரிகளால் நிரம்பி வழிந்தன. இந்த உண்மையை அல்-குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

“அல்லாஹ்வின் தூதரில் நிச்சயம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது”. (சூரா அல்-அஹ்ஸாப்: 21)

நபிகளார் ﷺ அவர்கள் மீது பற்றுவைத்தல் எனும்போது குறைந்தபட்சம் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்தும் ஸலாமும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) சொல்லல், அவர்களின் பெயர் கூறும் போதும் பிறர் கூறக் கேட்கும் போதும் கண்ணியப்படுத்தி ஸலவாத் சொல்லல், அவர்களது குடும்பத்தவர்கள் (அஹ்லுல்பைத்), தூய மனைவிமார்கள் மற்றும் நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) ஆகியோர் மீதும் அன்பும் கண்ணியமும் வைத்தல், ஹதீஸ்களை கற்றுக்கொள்ளல், சுன்னாக்களை பேணுதலோடு நடைமுறைப்படுத்தல், நபி ﷺ அவர்களின் ஆளுமைப் பண்புகளை புரிந்துகொள்ளவும் படித்து விளங்கவும் நேரம் ஒதுக்குதல், அறியாத மக்களுக்கு அன்னாரை அழகிய முறையில் அறிமுகம் செய்தல் மற்றும் அவர்களை தவறாகப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அப்புரிதலைக் களைந்து, சரியான புரிதலை அவர்களுக்கு வழங்கி நபிகளார் ﷺ அவர்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தல் என்பன அன்னாரின் சமூகத்தினர் என்ற வகையில் எமது கடமையும் பொறுப்புமாகும்.

எம் பெருமானார் அவர்கள் கொண்டுவந்த மார்க்கமும், அவர்களின் வாழ்க்கை முறைகளும், எல்லா மனிதர்களாலும் எடுத்து நடக்க இலகுவானதாகவும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானதாகும் என்பது உலகம் வியக்கும் விடயமாகும்.

அன்னார் கொண்டு வந்த இஸ்லாமியத் தூது ஈருலக வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. சாந்தியையும் சமாதானத்தையும் போதித்து நின்றது. அந்தத் தூது அநாகரிகமாக வாழ்ந்த மக்களை நாகரீகத்தின் பால் அழைத்துச் செல்லக்கூடியதாக இருந்தது.

“முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள்.” (சூரா அல்-ஹுஜ்ராத் : 02)

“(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்.” (சூரா அந்-நூர் : 63)

மேற்படி திருமறை வசனங்களின் ஊடாக அன்பு நபி ﷺ அவர்களுக்கு முன்னால் தமது சப்தத்தை உயர்த்திப் பேசுவதையும் அவர்களோடு அவமரியாதையாக நடந்து கொள்வதையும் அல்லாஹு தஆலா தடை செய்துள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதன்படி, நபி ﷺ அவர்களின் உத்தம தோழர்கள் அவர்களை தம் உயிருக்கும் மேலாக நேசித்ததோடு அவர்களிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் பண்பாட்டோடும் நடந்துகொண்டார்கள்.

எனவே, நாமும் அதேபோன்று அல்லாஹு தஆலா வழிகாட்டியதன் அடிப்படையில் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் எமது உயிரை விடவும் மேலான நபி ﷺ அவர்கள் மீது நேசம் வைப்போம்.

அவர்களது வாழ்க்கையை ஆழமாகக் கற்றுக் கொள்வதோடு, எமது பிள்ளைகளின் உள்ளங்களிலும் அவர்கள் மீதான அன்பையும் பற்றையும் விதைப்போம். அல்லாஹ் எம்மனைவரையும் இறுதிநாள் வரை நபி ﷺ அவர்கள் காட்டித்தந்த வழியில் வாழச்செய்வதோடு அன்னாரோடு சுவனத்தில் ஒன்றாக வாழும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற...

இறைத் தூதர் மீதான பொறுப்புக்களை உணர்த்திய ஜும்ஆ உரை!

நிதா பவுண்டேஷன் தலைவர் ஹஸன் பரீத் அவர்களின் இன்றைய(05.09.2025) தெஹிவலை முஹைதீன்...

மீலாத் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் விநியோகம்

புத்தளம், மன்னார் சாலை 4ஆம் மைல் கல் விலுக்கை கிராம பள்ளிவாசல்,...

மல்வானையில் காதிரிய்யதுன் நபவிய்யா ஏற்பாட்டில் மீலாத் நடைபவனி

"அண்ணலாரின் 1500 ஆவது மீலாத் தினத்தை அழகிய முறையில் அலங்கரிப்போம்" என்ற...