இந்தியாவின் லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் புதன்கிழமை வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்.ஏ.பி) சாா்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5 பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறாா்.
அவரின் போராட்டத்தைத் தொடா்ந்து, கோரிக்கைகள் தொடா்பாக எல்ஏபி மற்றும் காா்கில் ஜனநாயக கூட்டணி உடன் லடாக் தொடா்பான உயா் அதிகாரக் குழு அக்டோபா் 6-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.
இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த சோனம் வாங்சுக், கடந்த 10-ஆம் தேதிமுதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா். அவருடன் எல்ஏபி அமைப்பைச் சோ்ந்த 15 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, எல்ஏபி அமைப்பின் இளைஞா் பிரிவு மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
இதனிடையே, லே நிா்வாகம் சாா்பில் பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 163-இன் கீழ் தலைநகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவை மீறி என்டிஎஸ் நினைவு மைதானத்தில் புதன்கிழமை காலையில் கூடிய எல்ஏபி அமைப்பச் சோ்ந்தவா்கள் உள்பட ஏராளமானோா், முழக்கங்களை எழுப்பியபடி கண்டனப் பேரணியையும் நடத்தினா்.
பேரணியின்போது சிலா் பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மலைப் பிரதேச கவுன்சில் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதனால், போராட்டக்காரா்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனிடையே, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு மேல் எவ்வித போராட்டமும் நடைபெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பழைய காணொலிகள் மற்றும் போராட்டத்தை தூண்டும் காணொலிகளை சமூக ஊடகங்களில் யாரும் பதிவிடவோ, பகிரவோ வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.