முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல்: ஜெனீவா அமர்வுக்கு மத்தியில் திகன கலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

Date:

 2018ஆம் ஆண்டு கண்டி, திகன மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை வன்முறைகள் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆங்கிலத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

இது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60 வது அமர்வு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளது.

இந்த அறிக்கை 9 அமைச்சுகளுக்கும் அத்துடன் அரசாங்கம் செயல்படுத்த வேண்டிய 6 பிற முக்கிய பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

முக்கிய கண்டுபிடிப்புகள்

மார்ச் 2018 இல் திகனவில் நடந்த வன்முறை தன்னிச்சையான வெடிப்பு அல்ல, முஸ்லிம் சமூகத்தினரை இலக்குவைத்து தாக்குதல்கள் நடாத்தப்படும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தினுள் திகன சம்பவம் பொருந்துகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஜிந்தோட்டை மற்றும் அம்பாறையிலும் 1915 ஆம் ஆண்டளவில் வேறு சந்தர்ப்பங்களிலும் பதிவாகியிருக்கின்றன.

திகன வன்முறைகளின் பின்னணி, அச்சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து திரட்டப்பட்ட வாக்குமூலங்கள், அவ்வன்முறைகளால் ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள், அச்சம்பவம் தொடர்பான அவதானிப்புக்கள் மற்றும் இத்தகைய இனரீதியான வன்முறைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் என்பன அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.

எச்.ஜி.குமாரசிங்க எனும் பெயருடைய நபரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் சட்டத்தின் பிரகாரம் தெல்தெனிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாகவும், இருப்பினும் அந்நபர் கைதுசெய்யப்படவில்லை என குறித்தவொரு ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினரால் பரப்பப்பட்ட போலித்தகவல்களே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைவதற்கு வழிகோலியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளில் சிலர் இவ்வன்முறைத்தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், ஒட்டுமொத்த அதிகாரிகளும் அதனை ஊக்குவிக்கும் வகையில் செயற்படவில்லை என ஆணைக்குழுவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன் புலனாய்வுப்பிரிவின் பங்கேற்பு, வளங்கள், பாதுகாப்புத்தரப்பு உறுப்பினர்களின் போதாமை காரணமாகவே வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதாகவும், ஆகையினாலேயே சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் தலையீட்டைக் கோரவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

மதரீதியான செயற்பாடுகள் தொடர்பில் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றுப்பரவலினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டாயத்தகனம் செய்யப்பட்டமை மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சிலர் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைக் கொள்கைகள் என்பன கடும்போக்குவாதக்குழுக்களால் பயன்படுத்திக்கொள்ளப்படக்கூடிய ஒரு விரோத சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளன’ என மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

பரிந்துரைகள்
இந்நிலையில் எதிர்வருங்காலங்களில் இவ்வாறு குறித்தவொரு இனக்குழுமத்தை இலக்குவைத்து வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 11 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டவேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை ஆணைக்குழு அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

 

அதன்படி புலனாய்வுத்தகவல் திரட்டலை வலுப்படுத்தல், இனக்கலவரங்களை உடனடியாகத் தடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கல், பொலிஸாரின் பங்கேற்புடன் மாதாந்தம் சிவில் குழுக்கூட்டங்களை நடாத்துதல் என்பவற்றுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

அதேபோன்று பிரிவினைவாத மற்றும் கடும்போக்குவாத நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளைத் தடுக்கும் வகையில் அமைப்புக்களைப் பதிவுசெய்வதற்கு சமூகசேவைகள் மற்றும் நலன்கள் அமைச்சும், தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை பாடசாலைக்கல்விப்பாடவிதானத்தில் கட்டாய பாடமாக உள்வாங்குதல், இன மற்றும் மத ரீதியில் தனித்தனியாகப் பாடசாலைகள் நடாத்தப்படுவதை முடிவுறுத்தல், மனித உரிமைகள் மற்றும் சிவில் கோட்பாடுகளை வலுப்படுத்தக்கூடிய பாடத்திட்டத்தை உட்சேர்த்தல் என்பவற்றுக்கு கல்வியமைச்சும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி சட்ட அமுலாக்க அதிகாரிகளின் தவறான செயற்பாடுகள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத தாக்குதல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக வலுவான சட்டமறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அரச அதிகாரிகளால் இழைக்கப்படும் மிகமோசமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பிரத்யேக சுயாதீன அலுவலகமொன்றை ஸ்தாபிக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

கலவரங்களுக்குப் பதிலளிக்கும் நடைமுறைகளை மேம்படுத்துதல், பலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் அதிகாரிகளின் மன உறுதியை நிவர்த்தி செய்தல் போன்ற பரிந்துரைகளையும் அறிக்கை முன்வைத்துள்ளது.

வெறுப்புப் பேச்சு மற்றும் பொறுப்புக்கூறல்
இன அல்லது மத வெறுப்பை ஆதரிப்பதை குற்றமாக்கும் ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் பயனற்ற அமலாக்கம் குறித்து ஆணையம் குறிப்பாக எச்சரிக்கை விடுத்தது. திகனவில் வன்முறையைத் தூண்டுவதற்குப் பொறுப்பானவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் உள்ளனர் என்றும், வெறுப்புப் பேச்சு இணையத்தில் தொடர்கிறது என்றும் அது குறிப்பிட்டது.

முஸ்லிம்-விரோத வெறுப்புப் பேச்சு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், பெண்கள், பாலின சிறுபான்மையினர் மற்றும் LGBTQ+ தனிநபர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு அதிகரித்து வருவதாக HRCSL எச்சரித்தது. பிரிவினைக்கான ஆழமான சமூக மற்றும் கலாச்சார காரணங்களைச் சமாளிக்க திட்டங்களுடன் தற்போதுள்ள சட்டங்களை உடனடியாகப் பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை...

இனி பலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது இஸ்ரேல் பிரதமர்

இனி பலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு...

நாவிற்கு இனிய கிரஞ்ச் சுவையுடன் சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. இன் புதிய ‘ஸ்கேன் கசாவா சிப்ஸ்’ 4 சுவைகளில்

இலங்கையின் முன்னணி பல்துறை வணிகக் குழுமமான சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி., தனது...

ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராய்வு

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி...