காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் 51 வயதான ஹூசம் அபு சஃபியா (Hussam Abu Safia) இஸ்ரேலின் இராணுவ சிறையில் கொடூர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.
வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அபு சஃபியாவை, கடந்த டிசம்பர் மாதம் இஸ்ரேலிய படைகள் கைது செய்தது.
தற்போது இவர் இஸ்ரேலின் மோசமான சிறைகளில் ஒன்றான ஓஃபர் சிறையில் தனது மருமகனான ஹுசாம் ஜாஹர் உடன் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 28 ஆம் திகதி, சட்டத்தரணி கீத் காசிம் அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:
“இவர்கள் இருவரும் மாதத்திற்கு முப்பது நிமிடங்கள் மட்டுமே சூரிய ஒளியில் வெளிப்படுவதாக இருக்க முடிகிறது. கடுமையான சிரங்கு, கொப்புளங்கள் மற்றும் தோல் நோய்களால் அவதிப்படுகிறார்கள். ஒரே ஆடைகளைத் தொடர்ந்து அணிய நேரிடுகிறது; அதிலும் அரிதான இரண்டு நிமிடக் குளியல் மட்டுமே,” என தெரிவித்தார்.
மேலும், அவர்கள் தங்கள் உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு இழந்துள்ளதாகவும், தோல் மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகளும் அத்தியாவசிய மருந்துகளும் அவசியம் தேவையாக உள்ளதாகவும் காசிம் வலியுறுத்தினார்.
“நான் மனிதநேயத்தின் பெயரால் நுழைந்தேன்; மனிதநேயத்தின் பெயரால் வெளியேறுவேன்” என டாக்டர் அபு சஃபியா தனது சமீபத்திய செய்தியில் தெரிவித்தார். ஒரு கூடாரத்திலிருந்தே தனது மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான உறுதியையும் அவர் வெளிப்படுத்தினார்.
டிசம்பர் 27 ஆம் திகதி, வடக்கு காசாவின் கடைசி முக்கிய சுகாதார மையமாக இருந்த கமால் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலிய படைகள் சோதனை நடத்தியபோது, டாக்டர் அபு சஃபியா கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனை முற்றாக மூடப்பட்டது.
குழந்தைகள் நல மருத்துவரான அபு சஃபியா காசாவின் சுகாதார அமைப்பின் முக்கியமான நபராவார்.
இஸ்ரேல் இராணுவத்தின் கொடூரமான தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் அபு சஃபியா வெளி உலகிற்குக் கொண்டு வந்தது முக்கியமானது.
மேலும் இஸ்ரேல் இராணுவம், தனது வடக்கு காசா முற்றுகை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி, அனைவரையும் வெளியேற உத்தரவிட்டது. ஆனால் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்து, மக்களுடன் இருந்தார். மருத்துவ ரீதியான உதவிகளைச் செய்தும் வந்தார். இதுவே அவர் இஸ்ரேல் இராணுவத்தின் கோபத்திற்கு ஆளாவதற்குக் காரணமாக அமைந்தது.
மக்களின் மருத்துவரான அபு சஃபியாவை கைது செய்து சித்திரவதை செய்வதன் மூலம், மக்களுக்காக பணிபுரியும் மற்ற மருத்துவர்களையும் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதுதான் இனவெறி இஸ்ரேலின் நோக்கம்.
ஆனால், இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.