ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

Date:

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும் நிலையில், ஆப்கானில் வெளிநாட்டு இராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் `மாஸ்கோ ஃபார்மட் கன்சல்டேஷன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான்’ (Moscow Format Consultations on Afghanistan) என்ற அமைப்பின் 7ஆவது சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பு மாநாட்டில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்ற நிலையில், முதன்முறையாக ஆப்கானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியும் பங்கேற்றார்.

இந்த அமைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஆப்கானிஸ்தானை ஒரு சுதந்திரமான, ஒன்றுபட்ட மற்றும் அமைதியான நாடாகக் கொண்டுவர தங்கள் ஆதரவை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகள் தங்கள் இராணுவத்தை ஆப்கானிஸ்தானிலும் மற்ற நாடுகளிலும் நிலைநிறுத்தும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்ததுடன், அது அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு வழிவகுக்காது என்றும் கூறியது.

பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், ஆப்கானிஸ்தானில் வெளிநாடுகள் இராணுவம் வந்தால், அது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூட்டறிக்கை கூறியது.

இந்த சந்திப்பில் இந்திய பிரதிநிதியாக தூதர் வினய் குமார் பங்கேற்ற நிலையில், ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு இராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக இருந்த அமெரிக்க இராணுவம், 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறியது. அமெரிக்க ராணுவம் வெளியேறிய அதே ஆண்டில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் தாங்கள் உருவாக்கிய பர்காம் விமானத் தளத்தை மீண்டும் தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று   டிரம்ப் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இருப்பினும், அதனை மறுத்த தலிபான்கள், ஆப்கனிலிருந்து ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறினர்.

இதனைத் தொடர்ந்து, விமானத் தளத்தைக் கொடுக்காவிடில் என்ன நடக்கும் என்பதை நீங்களே அறிவீர்கள் என்று டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில், மாஸ்கோ ஃபார்மட் கன்சல்டேஷன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான் அமைப்பின் சந்திப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியை மேம்படுத்த 2017-ல் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த அமைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையானது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இராணுவம் நிலைநிறுத்தப்படுவதை எதிர்த்துத்தான் மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனலாம்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...