கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபரான பெண் கொலைக்கு பின்பு மித்தேனிய பகுதியில் இருந்து யாழ்பாணத்திற்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும், அதற்கு ஜே.கே.பாய் என்ற நபர் உதவியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்போது, செவ்வந்தி சுமார் ரூ.6.5 மில்லியன் செலவழித்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மூன்று வாரங்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
பின்னர் பேருந்து மற்றும் தொடருந்து மூலம் தப்பிச் சென்று, 7 நாட்களுக்குப் பிறகு நேபாளத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே நேற்று (13) நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பல மாடி வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐவரில் இலங்கையின் கம்பஹா மற்றும் கொழும்பு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான சஞ்ஜீவ குமார எனப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றவளாகத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐவர் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நேபாளத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் தற்போது தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றக்குழுவின் தலைவரான கெஹெல்பத்தரபத்மேவிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான சஞ்ஜீவ குமார எனப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கணேமுல்ல சஞ்ஜீவ வழக்குவிசாரணை நிமித்தம் அன்றைய தினம் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவமானது நாட்டின் நீதித்துறை மீதான பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியிருந்தது.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடாத்திய துப்பாக்கிதாரிக்கு உதவிபுரிந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்ட முக்கிய சந்தேக நபராக 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி அடையாளம் காணப்பட்டார்.
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியினை வழக்குதொடர்பான புத்தகம் ஒன்றில் மறைத்துவைத்து இஷாரா செவ்வந்தி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் துப்பாக்கி சூடு நடாத்தியதன் பின்னர் துப்பாக்கிதாரியும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியும் தப்பிச்சென்றிருந்த நிலையில் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அன்றைய தினம் முன்னெடுத்திருந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் இஷாரா செவ்வந்தி நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் இருந்து தப்பிச்சென்றிருந்த இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை கோரியிருந்தனர்.
இதன்படி சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தி உட்பட இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துரப்பட்ட நிலையில் தற்போது தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள திட்டமிடப்பட்டகுற்றக்குழுவின் தலைவரான கெஹெல்பத்தரபத்மேவுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உள்ளடங்கலாக ஐவர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட ஐவரில் இலங்கையின் கம்பஹா மற்றும் கொழும்பு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஐவர் நாளைய தினம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.