அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, தெமட்டகொட கைரியா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 527 மாணவிகளுக்கு, பாடசாலைக் காலணிகளைக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (17) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலாஃபர் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் பீர்கன்னு ரிஸ்வி மற்றும் அப்பள்ளியின் நம்பிக்கையாளர் சபையின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த நலன்புரித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் அவசரத் தேவையை கருத்திற்கொண்டு, பாடசாலை அதிபர் திருமதி ஜுமானா நிஜாம் விடுத்த கோரிக்கையினை, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் பீர்கன்னு ரிஸ்வி மற்றும் அப்பள்ளியின் நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு இத்திட்டம் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் எம். என். எம். ரோஷனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலாஃபர் :
இந்த இக்கட்டான சூழலில், மாணவிகளின் நலன் கருதி சுமார் 1.6 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்கிய வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன், இதே மாணவிகளுக்கு எதிர்காலத்தில் பாடசாலைச் சீருடைகளையும் வழங்க அவர்கள் முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது.
எந்த விதப் பாகுபாடுமின்றி மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் அனைத்து மத மற்றும் சிவில் அமைப்புகளையும் கௌரவிக்க வேண்டியது காலத்தின் தேவை எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ் அலா அஹமட், வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் அல் ஹாஜ் பீர்கன்னு ரிஸ்வி, அப்பள்ளியின் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

