டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

Date:

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத்ரஸா கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை ஒரே “டிஜிட்டல் காப்பகத்தின்” (Digital Archive) கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம், மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பரின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (15) அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் முதற்கட்ட மென்பொருள் வடிவமைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பொதுமக்களின் பாவனைக்காக இது 2026 மார்ச் மாதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என பிரதி அமைச்சர் இதன்போது அறிவித்தார்.

ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், அதேவேளை பயனர்கள் இலகுவாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் (User-friendly) கட்டமைப்பை உருவாக்குமாறும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் திணைக்களத்தின் சேவைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதால், அரச நிர்வாகத்தில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையும் வேகமும் உறுதி செய்யப்படும்.

கலந்துரையாடலில் உரையாற்றிய பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், “பாரம்பரிய கோப்பு முறைகளிலிருந்து விடுபட்டு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுச் சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதே எமது இலக்காகும்.

குறிப்பாக, வக்ஃபு சபையின் கீழ் உள்ள பள்ளிவாசல்களின் பூர்வீக ஆவணங்கள், காணிப் பத்திரங்கள் மற்றும் சட்ட ரீதியான பதிவுகளை எதிர்கால சந்ததியினருக்காக டிஜிட்டல் முறையில் பாதுகாப்பது காலத்தின் தேவையாகும்.

இந்த புதிய அமைப்பின் ஊடாக, பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக திணைக்களத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்து, இருப்பிடத்திலிருந்தே இணையம் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் தகவல்களைப் பெறவும் வழிவகை செய்யப்படும்.”

இந்தக் கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், வக்பு சபையின் தலைவர் முஹிதீன் ஹுசைன் மற்றும் வக்பு சபை உறுப்பினர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...