டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு இராஜதந்திர தூதுக் குழு, இருதரப்பு மற்றும் பலதரப்பு அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களை ஒன்றுசேர்த்து, நிதி அமைச்சு நேற்று (03) உயர்மட்ட நன்கொடையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார ஆகியோர் உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதமர் அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அனர்த்த நிலைமையின் போது அவசரகால நடவடிக்கை முதல், விரிவான, நீண்டகால மீள்கட்டமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்தி, சூறாவளியால் நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் ஏற்பட்ட பாரிய சேதம் குறித்த கண்ணோட்டத்தை திறைசேரிச் செயலாளர் இதன்போது தெளிவு படுத்தினார்.
குறிப்பாக உணவுப் பொருட்கள், நன்கொடைகள், சலுகை நிதி மற்றும் குறுகிய காலம் முதல் மத்திய கால உதவிகள் ஆகியவை போன்ற விரைவான மனிதாபிமான ஆதரவு தொடர்பில் அவர் வலியுறுத்தினார். பொருளாதாரத் துறைகளின் சுருக்கம் மற்றும் உள்நாட்டுக் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் தடைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய வங்கி ஆளுநர் வெளிப்புற நிதி ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் சர்வதேச நாடுகளை ஊக்குவிக்குமாறு தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களை அரச அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இங்கு குறிப்பிடுகையில், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஆறாவது தவணையான சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
