சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 49 ஆவது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8 ஆம் திகதி தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் புத்தகக் கண்காட்சி, ஜனவரி 21 ஆம் திகதி நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை நந்தனம் திடலில் மிகப் பெரிய அளவில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழிக்காக 428 அரங்குகளும், ஆங்கில மொழிக்காக 256 அரங்குகளும், பொது அரங்குகள் 24 உள்பட 1,000 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. ஜப்பான் மொழி நூல்களுக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நந்தனம் YMCA மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி, கடந்த ஆண்டுகளை விட விரிவான அளவில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள நூல்கள், கல்வி சார்ந்த புத்தகங்கள், இலக்கிய படைப்புகள், குழந்தைகளுக்கான நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி புத்தகங்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் ஒரே இடத்தில் வாசகர்களுக்காகக் கிடைக்கப்பெறும்.
மேலும், நடப்பாண்டில் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் எந்த தடையுமின்றி கண்காட்சியை பார்வையிட முடியும்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களை எளிதாக வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது.
புத்தகக் கண்காட்சியின் இன்னொரு சிறப்பம்சமாக, தினமும் மாலை நேரங்களில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் கலந்துகொண்டு சிறப்புரைகள் நிகழ்த்துவார்கள்.
இந்நிகழ்வுகளில் இலக்கியம், சமூக மாற்றம், அரசியல் சிந்தனை, அறிவியல் வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் பகிரப்படுகின்றன.
