இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான ஜனித் மதுசங்க எனப்படும் ‘பொடி லெசியை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர் இன்று (27) பத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபரான ஜனித் மதுஷங்க டி சில்வா எனப்படும் பொடி லெசி, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அழைத்து வரப்பட்ட பின் அவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தைப் புறக்கணித்து இந்தியாவில் மறைந்திருந்த பொடி லැசிக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நாட்டின் முக்கிய பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த குற்றவாளியாகக் கருதப்படுகிறார். பலபிட்டிய நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய அவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியாவார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களுக்கு அமைவாகவே அவர் இந்தியாவிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு அறிவித்தல் (Red Notice) இல்லாமலேயே அவரை நாட்டுக்கு அழைத்து வர முடிந்துள்ளது. இவ்வாறு சிவப்பு அறிவித்தல் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்களை பொலிஸாரால் நாட்டுக்கு அழைத்து வர முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
