புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை வேண்டி விசேட பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜம்இய்யா வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, புனித ரமழான் மாதத்தின் மகத்துவத்தை உணர்ந்து வீணான காரியங்களைத் தவிர்த்து, ஐவேளை தொழுகை, திக்ர், இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) மற்றும் ஸதகா (தர்மம்) போன்ற நற்செயல்களில் அதிக கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக சஹர் மற்றும் இப்தார் வேளைகளிலும், இரவு வணக்கங்களின் போதும் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நீதிக்காகப் பிரார்த்திக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஃபஜ்ர் தொழுகையின் குனூத் மற்றும் ரமழான் 15-ம் இரவிலிருந்து ஓதப்படும் வித்ர் தொழுகையின் குனூத் ஆகியவற்றில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஓதப்படும் ‘குனூத்துன் நாசிலா’ துஆக்களைச் சேர்த்து ஓதுமாறு அனைத்துப் பள்ளிவாசல்களும் முஸ்லிம்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதி நிலைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக ஜம்இய்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
