ஈரான் உடனான போர் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தற்போது கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
போரின் விளைவாக மக்களிடையே ஆதரவு பெருகாத நிலையில், முன்கூட்டிய பொதுத்தேர்தல் நடப்பதைத் தவிர்க்க அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஈரான் மீதான ‘ரோரிங் லயன்’ தாக்குதல் தொடங்கி நான்கு வாரங்கள் ஆகியும், நெதன்யாகுவின் லிக்குட் (Likud) கட்சியின் மீதான மக்களின் ஆதரவு கணிசமாக உயரவில்லை. மாறாக, போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மற்றும் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் சட்டப்படி வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அரசு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு தவறினால், அடுத்த 90 நாட்களில் தானாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதைத் தவிர்க்கத் தனது கூட்டணி கட்சிகளுக்குப் பெரும் நிதி ஒதுக்கீடு செய்து ஆதரவைத் தக்கவைக்க நெதன்யாகு முயன்று வருகிறார்.
ஆரம்பத்தில் ஜூன் மாதம் தேர்தல் நடத்தலாம் என நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போதைய கருத்துக் கணிப்புகள் நெதன்யாகுவிற்கு எதிராக உள்ளதால், தேர்தலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை தள்ளிப்போட அவர் திட்டமிட்டுள்ளார்.
போர் தோல்வியை நோக்கிச் செல்வதாகவும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே நெதன்யாகு போரை நீட்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட் (Yair Lapid) குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச அளவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும் அரசியல் ரீதியாக நெதன்யாகு ‘கார்னர்’ செய்யப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
