மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு விழிப்புடன் இருக்குமாறும், ‘ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட்’ (STEP) திட்டத்தில் பதிவு செய்யுமாறும் இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளை அமெரிக்கத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாகத் தூதரகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்திலிருந்து உடனுக்குடன் பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, http://step.state.gov என்ற இணையதளத்தில் ‘ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட்’ (STEP) திட்டத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து அமெரிக்கப் பிரஜைகளையும் ஊக்குவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்காவிற்குத் திரும்ப விரும்பும் இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஊடாகப் பயணிப்பதைத் தவிர்த்து, மாற்று விமானப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தமது பயணத் திட்டங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு, தூதரக அதிகாரியுடன் பேச விரும்பினால், திங்கள் முதல் வியாழன் வரை பிற்பகல் 1:00 மணி முதல் 2:00 மணி வரை அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“அவசர உதவி தேவைப்பட்டாலோ அல்லது இந்த நேரங்களில் வர முடியாவிட்டால், தயவுசெய்து தூதரகத்தின் அமெரிக்கப் பிரஜைகள் சேவைப் பிரிவை +94-11-202-8500 என்ற இலக்கத்தில் அழைக்கவும் அல்லது https://tinyurl.com/ACS-Visa-Navigator ஊடாக மின்னஞ்சல் செய்யவும்” என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
