மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (26) வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
யுத்த சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்களுடன் மிகவும் முறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேணுவதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கை முடிவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்பப் பின்னணி அறிக்கைகளை (Family Background Report) ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் (Time Frame) வழங்குவதற்கான புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தற்போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
