2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து கொள்முதல் விதிமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிகமாக, இந்த ஊழல் தொடர்பில் பின்வருவோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது:
ஜனக்க சந்திரகுப்த (சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர்) – 50 மில்லியன் ரூபா
பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன (தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர்) – 50 மில்லியன் ரூபா
வைத்தியர் விஜித் குணசேகர (தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி) மற்றும் வைத்தியர் துசித சுதர்சன (சுகாதார வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்) ஆகிய இருவரும் இணைந்து மேலும் 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும்.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
