நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள் முனையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் மேலாண் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
எந்தவிதப் பாதிப்பும் இன்றி விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
QR முறைமை மற்றும் இலக்கத் தகட்டின் ஒற்றை/இரட்டை இலக்க முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் காணப்பட்ட நீண்ட வரிசைகள் முடிவுக்கு வந்துள்ளன.
இன்றைய தினம் (20) வாகனத்தின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகக் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இந்த முறையினால் நெரிசல் குறைந்துள்ளதாகவும், அனைவரும் இலகுவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வெல்லவாய பகுதியிலும் எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதுடன், பாதுகாப்புக்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கந்தளாய், திருகோணமலை, கிண்ணியா மற்றும் மூதூர் டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கப்படுகிறது.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எண்ணெய் சேமிப்பு முனையங்களில் எவ்விதத் தடையுமின்றி விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
