இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் ‘வேற்றுமைக்குள் ஒற்றுமை’ காணும் ஒரு முன்மாதிரி சமூகமாகவே தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளது.
எமது கொள்கை ரீதியான மற்றும் தத்துவார்த்த ரீதியான கருத்தியல் வேறுபாடுகள் எப்போதுமே ஒருவரை ஒருவர் ஆக்கிரமிப்பதாக அமைந்ததில்லை. மாறாக, அவை குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டலில் உருவான பரஸ்பர புரிந்துணர்வு, கருத்துச் சுதந்திரம் மற்றும் விட்டுக் கொடுப்பு என்ற உன்னத பண்புகளால் பிணைக்கப்பட்டிருந்தன.
நமது முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற இந்த நெகிழ்வுப்போக்கும், விட்டுக்கொடுப்பும் நிறைந்த கட்டமைப்பு மென்மேலும் பலப்பட வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் இது சிதைந்து போவதை சமூகம் விரும்பாது.
நிச்சயமாக மூஃமின்கள் அனைவரும் சகோதரர்களே” (அல்குர்ஆன் 49:10) எனும் இறைவசனத்திற்கு இணங்க, எமது பிளவுகள் எப்போதும் எம்மை பலவீனப்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. “பிரிவினை என்பது அந்நிய சக்திகளுக்கே வாய்ப்பாக அமையும்” என்ற கசப்பான உண்மையை உணர்ந்து, சமூக ஒருமைப்பாட்டை காப்பது எமது காலத்தின் கட்டாயமாகும்.
சமீபத்தில் “அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்” தொடர்பான ஒரு நூலின் வெளியீடு மற்றும் அது சார்ந்த தகவல்கள் எனது கவனத்திற்கு வந்தன. இது குறித்து தெளிவான புரிதல்களைப் பெற எடுக்கப்பட்ட முயற்சிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இது தொடர்பில் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு ஒரு கவலையான சூழலை உருவாக்கியுள்ளது.
காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த அந்த ‘உள்ளக ஒற்றுமை’ எனும் தூய நீரோட்டத்தில் ஏதேனும் மாசு படிந்து விடுமோ என்ற அச்சம் சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு இதயத்திலும் எழுவது இயல்பானதே.
எனவே, இந்த நிகழ்வை முன்னெடுக்கும் அன்பு சகோதரர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.
குர்ஆன் மற்றும் சுன்னாவை இந்த மண்ணில் நிலைநாட்ட முனையும் உங்களது புனிதமான நோக்கம், எமது சமூகத்தின் பலமான அடித்தளத்தை எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது.
எமது நகர்வுகள் அனைத்தும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும், பரந்த சிந்தனையுடனும், சகல தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் வகையிலும் அமைய வேண்டும்.
இந்த சமூகக் கட்டமைப்பின் ஒரு சிறு அங்கமாக நின்று, சமூகத்தின் எதிர்கால நலன் கருதி இதனை ஒரு சகோதர உணர்வுடனும், இராஜதந்திர கண்ணோட்டத்துடனும் பரிசீலிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன். இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் ஒன்று சேர்ப்பானாக.
-நன்றி Wazeer Muhkthar (facebook)

