இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUI) ஒப்பீட்டு மதங்கள் துறையின் (Department of Comparative Religions) விரிவுரையாளரும் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமான கலாநிதி அப்துல் மலிக் சுகவீனம் காரணமாக நேற்று (26) காலமானார்.
அவரது ஜனாஸா இஸ்லாமாபாத் இஸ்லாமியப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது ஜனாஸா நல்லடக்கத்தைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கலாநிதி அகமது சாத் அல்-அஹ்மதி முன்னின்று நடத்தினார்.
பல்கலைக்கழகத்தின் உயர்மட்டத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு அன்னாரது மறைவிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
கலாநிதி அப்துல் மலிக், இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார். அவரது கல்விப் பங்களிப்பு மற்றும் கண்ணியமான பண்புகளை நினைவு கூர்ந்த வேந்தர், அன்னாரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுக்குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து, மறைந்த அப்துல் மலிக் அவர்களின் மகனைச் சந்தித்துத் தங்களது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
