அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சில இனவாத சக்திகளால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து சமூக நீதிக் கட்சி தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இம்முறை புனித ஹஜ்ஜுப் பெருநாள் மே மாதம் 28 அல்லது 29 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
தற்செயலாக, இக்காலப்பகுதி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வெசாக் வாரத்திற்குள் அமைகிறது. ஹஜ்ஜுப் பெருநாள் என்பது உழ்ஹிய்யா (குர்பான்) கடமைகளோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு தினமாகும்.
தற்போது மேலெழுந்துள்ள இனவாதச் சூழலைக் கருத்திற்கொள்ளும்போது, வரும் நாட்களில் உழ்ஹிய்யா கடமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் வெறுப்புப் பிரச்சாரங்கள் தீவிரமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே, சமூக நீதிக் கட்சி முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள், முஸ்லிம்கள் தமது புனித ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வித அச்சமுமின்றி கொண்டாடவும், உழ்ஹிய்யா கடமைகளை சுமுகமாக நிறைவேற்றவும் அரசாங்கம் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்ட ரீதியான உழ்ஹிய்யா கிரியைகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை உள்ளூர் அதிகாரிகளூடாக வழங்க வேண்டும்.
சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிப் பிரசாரங்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில், ஒரு சமூகத்தின் மதக் கடமைகள் மற்றுமொரு சமூகத்தின் பண்டிகைக் காலப்பகுதியில் வரும்போது, அதனைப் புரிந்துணர்வோடு கையாள்வதற்கு அரசாங்கம் முறையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என சமூக நீதிக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
