நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட, பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவு கூரும் நிகழ்வு நேற்றைய தினம் (31) தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்றது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் தொற்று உலகெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களைக் காவு கொண்டிருந்த சூழ்நிலையிலே, நமது நாடான இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி பல துன்பங்களை அது ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையை இனவாதத்தின் ஆயுதமாகப் பயன்படுத்திய போதைய ஆட்சியாளர்கள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குப் பதிலாக ஏனைய சடலங்களைப் போலவே அவர்களின் உடல்களையும் கோவிட் காரணத்தினால் மரணிக்கின்ற உடல்களை எரிக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்திற்குப் புறம்பான ஒரு தீர்மானத்தை முஸ்லிம்களின் உணர்வுகளையும் விருப்பத்தையும் தாண்டி ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடைய உடல்கள் தீயிலே எரித்து சாம்பலாக்கப்பட்டன.
இன்னும் பலரது உடல்கள் உறவினர்களுக்குக் காணாமலேயே மஜ்மா மையவாடி என அழைக்கப்படுகின்ற ஓட்டமாவடி மஜ்மா மையவாடியிலே அரச ஏற்பாட்டிலே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த உயிருக்கு நெருக்கமான நிகழ்வை நிகழ்வு கூறும் ஆறாவது வருட நினைவு தினம் தெஹிவளை முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.
இவ்வைபவத்தில் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலமா சபை முக்கியஸ்தர்கள் உட்பட இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த 20ற்கும் மேற்பட்ட அமைப்புகளுடைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வின் பொழுது 20 அமைப்புகள் சார்பாக பல கோரிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை இந்த அமைப்புகளின் சார்பாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ் அவர்கள் வாசித்தார்.
அந்த பிரகடனத்திலே பலவந்த தகனக் கொள்கையின் அமுலாக்கம் தொடர்பாக சுயாதீனமான மற்றும் நம்பகமான பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மார்ச் 31-ஆம் தேதியை தேசிய நினைவு நாளாக – கோவிட் ஜனாஸா எரிப்பிற்குரிய தேசிய நினைவு நாளாக பிரகடனப்படுத்துதல், அனைத்து சமூகங்களும் மதிக்கக்கூடிய வகையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட தேசிய நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவுதல் என்ற கோரிக்கைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த 6ம் ஆண்டு நினைவு நிகழ்வின் முடிவிலே, ஏழாவது வருட நினைவு கூரலை ஓட்டமாவடியில் இருக்கும் மஜ்மா நல்லடக்க மையத்திலே நடத்துவதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.
நிகழ்வை Short News ஊடகத்தின் பொறுப்பாளர் அல்-ஹாபிஸ் அப்துர் ரஹ்மான் சிறப்பாக வழிநடத்தினார்.
தெஹிவளை பள்ளிவாசலின் பேஷ் இமாம் அவர்களால் இதன்போது மரணித்தவர்களுக்கான விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.

