பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக 2026 உலகளாவிய சுமூத் கப்பல் குழுவின் (Global Sumud Flotilla) வசந்தகால மிஷன் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த மனிதாபிமானப் பயணத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சமீரா மெஹ்பூப்தீன் கலந்து கொள்கிறார்.
இதனை முன்னிட்டு, இப்பயணம் வெற்றியடைய வேண்டி சர்வமத பிரார்த்தனை மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு இலங்கையிலுள்ள பாலஸ்தீனத் தூதரகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை, இலங்கை சுதந்திர பாலஸ்தீன இயக்கம் (Free Palestine Movement Sri Lanka) ஏற்பாடு செய்திருந்தது.
மனிதாபிமானப் பயணத்தின் வெற்றி மற்றும் காசா மக்களின் விடிவு வேண்டி பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்களின் பங்களிப்புடன் சர்வமத பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
காசாவில் துயருறும் மக்களுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் இஹாப் ஐ.எம். காலில் (Ihab I.M. Khalil) மற்றும் பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டு, சமீரா மெஹ்பூப்தீனுடன் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி பயணத்தை வாழ்த்தித் தொடங்கி வைத்தனர்.
இலங்கையிலிருந்து ஒரு பிரதிநிதி இந்தப் சர்வதேச முயற்சியில் இணைந்திருப்பது பலஸ்தீன மக்களுடனான எமது நாட்டின் தார்மீக ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த 2026 வசந்தகால மிஷன் உலகெங்கிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமான ஆர்வலர்களை உள்ளடக்கியது. இது 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நேரடியாக காசாவிற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீரா மெஹ்பூப்தீன் இதில் பங்கேற்பது, பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்து வழங்கி வரும் தார்மீக மற்றும் மனிதாபிமான ஆதரவின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.

