அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான் அரசு புதிய முன்மொழிவு ஒன்றைப் பாகிஸ்தான் ஊடாக வழங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் (27) நிறைவடையும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய திட்டத்தை ஈரான் முன்வைத்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.
ஈரான் பிரதிநிதிகள் அங்கு வருகை தந்த போதிலும், அமெரிக்கக் குழுவினர் கடைசி நேரத்தில் தமது பயணத்தை இரத்து செய்ததால் பேச்சுவார்த்தை முடைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மத்தியஸ்தக் குழுவிடம் தனது புதிய முன்மொழிவை ஈரான் கையளித்துள்ளது.
அமெரிக்காவின் ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் பின்வரும் மூன்று நிலைகளை நிபந்தனைகளாக முன்வைத்துள்ளது.
பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கப்பட வேண்டும். அத்துடன், மூடப்பட்டுள்ள ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறக்கப்பட்டு, கடல்வழிப் போக்குவரத்து வழமைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.
மேற்கூறிய இரு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க ஈரான் தயாராக உள்ளது.
“அணு ஆயுத உற்பத்தியை ஈரான் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம்” என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.
ஆனால், அணு ஆயுத விவகாரத்தை இறுதி நிபந்தனையாக ஈரான் மாற்றியுள்ளதால், இந்த புதிய முன்மொழிவை அமெரிக்கா ஏற்குமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது.
இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைவதால், அடுத்தகட்டமாகப் போர் தீவிரமடையுமா அல்லது இராஜதந்திர ரீதியில் தீர்வு எட்டப்படுமா என்ற பதற்றம் சர்வதேச ரீதியில் அதிகரித்துள்ளது.
