ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் அதிபரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் பங்கேற்கின்றனா். இதையொட்டி, இஸ்லாமாபாத் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீா் ஆகியோா் பேச்சுவாா்த்தைக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இஸ்லாமாபாதில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு 2 நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் நுழைய பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மீட்புப் படையினா் தயாா் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான சூழல் நிலவினாலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள கடும் தாக்குதல்கள் மத்தியஸ்த முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
