புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றுள்ள இலங்கை ஹாஜிகள், மினாவில் உள்ள கூடாரங்களில் தங்களுக்குரிய அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவரும், அம்ஜா டிராவல்ஸ் (Amja Travels) நிறுவனத்தின் உரிமையாளருமான அல்ஹாஜ் ஏ.எம். அம்ஜதீன் தெரிவித்துள்ளார்.
‘NewsNow’ இற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் விவரித்துள்ளதாவது, “மினாவில் தங்கியுள்ள ஹாஜிகளுக்கு உணவு வழங்குவதில் கடுமையான குளறுபடிகள் காணப்படுகின்றன. நீண்ட வரிசையில் காத்திருந்தும் கூட, அவர்கள் சொன்ன உணவை எங்களுக்குச் சரிவர வழங்கவில்லை.
அதேபோன்று, மலசலகூட வசதிகளிலும் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. அங்கு சுமார் 3,500 பேர் வரை தங்கியுள்ள நிலையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மலசலகூடங்களே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஹாஜிகள் அனைவரும் கடுமையான அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.”
இந்தத் துயரமான சூழ்நிலைக்கு ‘ரஹ்லத் மினா’ (Rahlath Mina) நிறுவனமும், இலங்கை ஹஜ் திணைக்களத்தின் தவறான வழிகாட்டுதலுமே முக்கியக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“கடந்த ஆண்டு நாங்கள் ‘முஜிபுல் பைத்’ நிறுவனத்தின் மூலமாக ‘பி’ பிரிவில் (B Category) கூடாரங்களை எடுத்திருந்தோம். அவர்கள் தங்களுக்குரிய சேவைகளை மிகவும் சிறப்பான முறையில் செய்து தந்திருந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு திணைக்கள அதிகாரிகள் எங்களை ‘ரஹ்லத் மினா’ நிறுவனத்தின் மூலம் மட்டுமே சேவைகளைப் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தினர். எங்களிடம் வேறு வழியில்லாததால், நாங்கள் அவர்களின் கட்டாயத்தின் பேரில் இந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் திணைக்கள அதிகாரிகள் ஹாஜிகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இலங்கை ஹாஜிகளுக்குத் தேவையான வசதிகள் குறித்து ‘ரஹ்லத் மினா’ நிறுவனத்தின் தலைவர் அஹ்மத் அவர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது, அவர் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.
“திணைக்கள அதிகாரிகள் ‘ரஹ்லத் மினா’ நிறுவனம் ‘ஏ’ பிரிவு (A Category) சேவைகளை வழங்கும் எனப் பெருமையாகக் கூறிக்கொண்டனர். ஆனால், அங்கு எங்களுக்கு ஒரு படுக்கையைத் (Bed) தவிர வேறு எந்தவொரு முறையான சேவையும் கிடைக்கவில்லை.” என ஹாஜிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


