18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்திற்கும் ஜனசக்தி அறக்கட்டளைக்கும் இடையிலான விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (06) முற்பகல் கையெழுத்திடப்பட்டது.
சிறுவர்களின் சுகாதார வசதிகள் தொடர்பான நிதித் தடைகளை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் மற்றும் ஜனசக்தி அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் தேசியப் பணியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், ‘நாளை வெல்லும் உலகிற்கு இன்று சுகவாழ்வை அளிப்போம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நோயாளியின் சிகிச்சைக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு பகுதி மாத்திரமே வழங்கப்படும். ஆனால், இந்தப் புதிய ஒத்துழைப்பின் கீழ், ஜனசக்தி அறக்கட்டளையானது ஜனாதிபதி நிதியம் வழங்கும் அதே சமமான தொகையை அல்லது சிகிச்சைக்கான மீதித் தொகை ஆகிய இரண்டில் எது குறைந்த பெறுமதியோ அந்தத் தொகையை வழங்கும்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே மக்களின் நிதியமாக மாற்றி அதன் செயற்பாடுகளை பரவலாக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுவதாகவும், ஜனசக்தி அறக்கட்டளையுடனான இந்த ஒப்பந்தம் அந்தச் செயல்முறையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
