அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோல்ட்மேனுக்கு தங்களது கடையில் காபி அல்லது எவ்வித சேவைகளையும் வழங்க முடியாது என புரூக்ளினில் உள்ள பிரபல ‘பொயடிகா காபி’ (Poetica Coffee) என்ற காபி ஷாப் தடைய விதித்துள்ளது.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த காபி ஷாப் மீது அமெரிக்க நீதித்துறை (DOJ) சிவில் உரிமை விசாரணை ஒன்றை அதிரடியாகத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோல்ட்மேன் தனது 7 வயது மகளுடன் இந்த காபி ஷாப்பிற்குச் சென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு, அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைPost ஒன்றை வெளியிட்டது. அதில் கோல்ட்மேன் காபி வாங்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர் வாங்கிய காபிக்கான தொகையை ரீஃபண்ட் (Refund) செய்துவிட்டதாக அறிவித்தது.
“பொயடிகா காபியில் நாங்கள் இனவாதிகள், பாசிஸ்டுகள் மற்றும் இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பவர்களுக்கு சேவை செய்வதில்லை. உங்களை உடனடியாக அடையாளம் தெரியாததால் காபி வழங்கிவிட்டோம். உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை” என்று அந்தப் பதிவில் கடுமையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கோல்ட்மேன் தொடர்ந்து அரசியல் மற்றும் இராணுவ ஆதரவளித்து வருவதைக் கண்டித்தே இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைகள் பிரிவின் உதவி அட்டர்னி ஜெனரல் ஹர்மீத் தில்லான் இந்த காபி ஷாப் மீது முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
“அமெரிக்க ஃபெடரல் சட்டத்தின்படி பொதுச் சேவை வழங்கும் காபி ஷாப்கள் போன்ற வணிக நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களை இனம், மதம் அல்லது அவர்கள் சார்ந்த நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்துவதோ, சேவைகளை மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்” என்று நீதித்துறை எச்சரித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோல்ட்மேன் இது ஒரு “வருத்தமளிக்கும் செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காசா போரை முன்வைத்து நியூயார்க் மக்களிடையே நிலவி வரும் அரசியல் மற்றும் தார்மீகப் பிரிவினையை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
