அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான) பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
களனி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான சுமார் 300 மி.மீ. குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சியை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை, ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணி வரை 48 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.
இந்த எச்சரிக்கையின் படி, களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் உயர்வதால் ஹங்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம, கடுவலை, கொலன்னாவை, களனி, வத்தளை, மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட தாழ்வானப் பகுதிகள் பாதிக்கப்படலாம்.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், வெள்ள அபாயம் உள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
