இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam Abu Safiya) மற்றும் மர்வான் அல்-ஹம்ஸ் (Marwan al-Hams) ஆகியோர் தினசரி கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதால், அவர்களின் உயிருக்குக் கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
வடக்கு காசாவின் கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரான டாக்டர் அபு சபியா மற்றும் காசா பகுதி கள மருத்துவமனைகளின் இயக்குநரான டாக்டர் அல்-ஹம்ஸ் ஆகியோரை இஸ்ரேலிய சிறைத்துறை திட்டமிட்டுக் கொலை செய்ய முயல்வதாகப் பாலஸ்தீன கைதிகள் விவகாரங்களுக்கான ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள்:
டாக்டர் அபு சபியாவின் சட்டத்தரணி நாசர் ஒடே (Nasser Odeh) அவரை நேரில் சந்தித்த பிறகு கூறுகையில், “அவரது முகம், தலை, கழுத்து, கண் மற்றும் காதுப் பகுதிகளில் கடுமையான சித்திரவதைகளுக்கான புதிய காயங்கள் உள்ளன. அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் இருவரும் பட்டினி போடப்படுவதுடன், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்டு, பெரும்பாலான நேரங்களில் கைகால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களால் நேராக உட்காரவோ, முழு வாக்கியங்களாகப் பேசவோ முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது.
எந்தவொரு குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இன்றி, இஸ்ரேலின் ‘சட்டவிரோதப் போராளிகள் சட்டத்தின்’ (Unlawful Combatant Law) கீழ் இந்த மருத்துவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். காசாவில் தங்களது மனிதாபிமான மருத்துவப் பணியைச் செய்ததற்காக, அவர்கள் பழிவாங்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
யூரோ-மெட் மனித உரிமை கண்காணிப்பகம் (Euro-Med Monitor) மற்றும் அஸ்ரா ஊடக மையம் (Asra Media) ஆகிய அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை உடனடியாக இதில் தலையிட்டு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் பெற்ற இந்த சிவிலியன் மருத்துவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
