கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு, 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையை இலவசமாக மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த மௌலவி சமீம் என்பவரே இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பெற்றுள்ளார். கொவிட் காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சவாலான பணியில் ஈடுபட்ட இளைஞர் குழுவில் இவர் முக்கிய பங்காற்றினார்.
மௌலவி சமீமின் அர்ப்பணிப்புள்ள சேவையைக் கௌரவிக்கும் வகையில், அவருடன் பணியாற்றிய ஏனைய இளைஞர்களே இவருடைய பெயரை இந்த இலவச ஹஜ் பயணத்திற்காகப் பரிந்துரைத்திருந்தனர்.
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் நேற்று (04) தனது அமைச்சில் வைத்து சமீமிடம் விமான பயணச்சீட்டுகள் மற்றும் ஹஜ் பயண ஆவணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
தன்னலம் கருதாது சமூகத்திற்காகப் பணியாற்றிய ஒருவருக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
