ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு பெற்ற) நேற்று (26) மொஸ்கோ நகரில் ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் வசிலி ஒஸ்மகோவ் (Vasily Osmakov) அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மொஸ்கோவில் நேற்று (26) முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச பாதுகாப்பு மன்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பிரதிநிதிகளின் வருடாந்த கூட்டத்தில் (1st International Forum on Security and the Annual Meeting of High Representatives for Security Issues) கலந்துகொள்வதற்காக பாதுகாப்புச் செயலாளர் அங்கு சென்றுள்ள நிலையிலேயே, அதற்கு இணையாக இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு சவால்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அத்துடன், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையே பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறைகளில், குறிப்பாக இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் இங்கு உறுதிப்படுத்தப்பட்டது.
