இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் அரபு மொழித் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசிய அளவிலான அல்குர்ஆன் அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி – 2026” (Al-Qur’anic Scientific Arabic Calligraphy Competition and Exhibition – 2026) கடந்த 12 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த மாணவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் அரபு மொழி ஆர்வலர்களை ஒன்றிணைத்த இந்த நிகழ்வு, அரபு எழுத்தணி கலையின் ஆன்மீக ஆழம், அறிவியல் வெளிப்பாடு மற்றும் கலை அழகை உலகிற்கு பறைசாற்றும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் தலைவர் அஷ் ஷேக் எம்.எச்.எம். முனாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய கல்வியாளர்களும் அதிதிகளும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ஐ. முகமது அலி ஜின்னா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இக்கண்காட்சியின் சிறப்பம்சமாக, இலங்கை அரபு எழுத்தணி சங்கத்தின் (Arabic Calligraphy Association of Sri Lanka – ACAS) பங்களிப்பு அமைந்திருந்தது. அஷ்-ஷைக் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்களின் தலைமையின் கீழ், பின்வரும் திறமைமிக்க அரபு எழுத்தணி கலைஞர்களின் அரிய கலைப்படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
அஷ்-ஷைக் உவைஸ் நளீமி, அஷ்-ஷைக் ஜுனைத் நளீமி, அஷ்-ஷைக் சில்மி நூரி, மேலும், அஷ்-ஷைக் ஃபஹிம் நளீமி அவர்கள் ACAS அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றினார்.
இப்பல்கலைக்கழக அளவிலான மதிப்புமிக்க நிகழ்வில் எங்களது ACAS அமைப்பு தீவிரமாகப் பங்கேற்று, எமது நிறுவனத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் கண்காட்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் படைப்புகள், மாணவர்களின் சிறந்த எழுத்தணி ஆக்கங்கள் மற்றும் பல அற்புதமான கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அல்குர்ஆன் வசனங்கள் பல்வேறு அரபு எழுத்தணி வடிவங்களில் (Styles) கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன், அவர்களின் பாராட்டுகளையும் பெற்றது.
இஸ்லாமியக் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் உன்னதமான வடிவமாகத் திகழும் அரபு அரபு எழுத்தணியின் செழுமையை நேரில் காணும் வாய்ப்பை வழங்கிய இந்நிகழ்வில் பங்கேற்றது, எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத மற்றும் மதிப்புமிக்க அனுபவமாகும்.

