இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், முறையான மற்றும் சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்தவோ அல்லது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சுமன ஹந்தகல தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (HPB) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
“ஆஸ்துமா நோய் என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு தொற்றாத நோயாகும். தற்போது உலகில் சுமார் 260 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிக அதிகமாகக் காணப்படுகிறது.”
உலகளவில் இந்நோயின் தீவிரம் குறித்து அவர் மேலும் விளக்குகையில், உலகெங்கிலும் நாளொன்றுக்கு சுமார் 1,000 பேர் ஆஸ்துமா நோய் காரணமாக உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே, இந்நோய் அறிகுறி உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே தகுந்த சுவாசப் பிரிவு விசேட வைத்தியர்களை நாடி, உரிய ஆலோசனைகளையும் இன்ஹேலர் (Inhaler) உள்ளிட்ட முறையான சிகிச்சைகளையும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வது மரணங்களைத் தவிர்க்க இன்றியமையாதது என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்துகின்றனர்.
