நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை முறையான வழிகாட்டல்களின் கீழ் நிருவகிப்பதன் ஊடாக, ஒட்டுமொத்த சமூகத்தையும் பொருளாதார, கல்வி மற்றும் ஒழுக்க விழுமிய ரீதியாகக் கட்டியெழுப்பி வலுவூட்டுவதை பிரதான நோக்கமாகக் கொண்ட “மஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டுத் திட்டம்” எனும் தலைப்பில் விசேட வழிகாட்டல் செயலமர்வொன்று, (05) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி எம்.ஐ. ஜௌபர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் ஆளுகையின் கீழ் உள்ள 33 பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
காலமாற்றத்திற்கு ஏற்ப மஹல்லா நிர்வாகங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன், பள்ளிவாசல்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மாத்திரமன்றி, சமூகத்தின் சகல தேவைகளையும் இனங்கண்டு நிவர்த்தி செய்யும் பிரதான மையங்களாக மாற்றுவதே இந்த வழிகாட்டல் செயலமர்வின் முக்கிய இலக்காகும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இச்செயலமர்வில் அஷ்-ஷைக் கலாநிதி ஜிஹான் அவர்களினால் “மஹல்லா அடிப்படையிலான சமூக வலுவூட்டலின் முக்கியத்துவம்” எனும் தலைப்பிலும், அஷ்-ஷைக் ஹஸன் ஸுலைமான் அவர்களினால் “பள்ளிவாசல் மதிப்பீடு மற்றும் MEEDS திட்டம்” எனும் தலைப்பிலும் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
அத்துடன், தற்கால சமூக மேம்பாட்டிற்கு இன்றியமையாத தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் தரவுத்தளங்களின் முக்கியத்துவம் குறித்து மென்பொருள் பொறியியலாளர் திரு. அஸ்மீர் அலி அவர்களினால் “Mahalla360 (My Mahalla App)” மென்பொருள் அறிமுகத்துடன் கூடிய விசேட விளக்கமளிப்பும் வழங்கப்பட்டது.
இச்செயலமர்வின் இறுதிப் பகுதியில், பங்கேற்பாளர்களுக்கு மஹல்லா சமூக வலுவூட்டல் தொடர்பான மாதிரி செயல் திட்டங்கள் (Action Plan Sample) குறித்த நடைமுறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

